விருதுநகர்: விருதுநகர் ஒன்றிய கிராமங்களுக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டு 93 நாட்களாகியும் தண்ணீர் போய் சேரவில்லை. அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் கிராம ஊராட்சிகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. விருதுநகர், சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியங்களுக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.236 கோடியில் 2010ல் பணிகள் துவக்கப்பட்டு 10 ஆண்டுகளாக தரமற்ற வகையில் வேலை நடந்துவந்தது. குடிநீர் பணிகள் முடிவடையாமலேயே 2020 மார்ச் 1ல் முதல்வரால் அரைகுறையாக திறந்து வைக்கப்பட்டது. முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குழாய்களில் உடைப்பு எடுத்து தண்ணீர் சாலையோரங்களில் குளம் போல் பல இடங்களில் தேங்கி நிற்கிறது. விருதுநகர் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்ட நிலையில் தாமிரபரணி தண்ணீரை வைத்து நிலைமையை சமாளித்து விடலாம் என ஊராட்சி நிர்வாகங்கள் நினைத்திருந்தன.