சென்னை: சென்னையில் மளமளவென உயரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மொத்த இந்தியாவிலும், கொரோனா வைரஸ் பாதிப்பு கணிசமாக அதிகமாக உள்ள மாநிலங்களில் ஒன்று தமிழகம். அதிலும் தலைநகரம் சென்னையில்தான் நிலைமை மிக மோசமாக உள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 809 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன்படி, சென்னையில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 585 என்ற அளவில் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 3,060 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் 1,921 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 2,007 திரு.வி.க.நகரில் 1,711 பேருக்கும், தேனாம்பேட்டையில் 1871 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
அதேபோல், அண்ணா நகர் மண்டலத்தில் 1,411 பேருக்கும், வளசரவாக்கத்தில் 910 பேருக்கும், அடையாறில் 949 பேருக்கும், திருவொற்றியூரில் 559 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மாதவரம் மண்டலத்தில் 400, மணலியில் 228, அம்பத்தூரில் 619, ஆலந்தூரில் 243, பெருங்குடியில் 278 மற்றும் சோழிங்கநல்லூரில் 279 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.