திருமலை: தெலங்கானாவில் நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக பலியாயினர். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர். தெலங்கானா மாநில அரசுக்கு சொந்தமாக பெத்தபல்லி மாவட்டம், சிங்கரெனியில் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு நிலக்கரி வெட்டி எடுப்பதற்காக சுரங்கத்தில் ஊழியர்கள் நேற்று வெடிபொருட்களை நிரப்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவை வெடித்து சிதறியது. இதில் ஒப்பந்த ஊழியர்கள் பிரவீன், ஆஞ்சய்யா, ராகேஷ், ராஜேஷ் ஆகிய 4 பேர் உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
மேலும், வெங்கடேஷ் மற்றும் பிரம்மய்யா ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை சக ஊழியர்கள் கோதாவரிகனி அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிங்கரெனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெடி விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.