கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் ரயில்வே கேட்டை ஒட்டியுள்ள ஏரிக்கரை காலி மைதானத்தில் நேற்று முன்தினம் வாலிபர் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், சென்னை எண்ணூரை சேர்ந்த பிரபல ரவுடி ரமேஷ் (34). இவர் மீது சென்னை உள்பட பல காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி, கொலை முயற்சி உள்பட 23 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், தைலாவரத்தை சேர்ந்த பார்த்திபன், ரமேஷை கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார், பார்த்திபனை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் பார்த்திபன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறியதாவது. ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட ரமேஷ் சிறையில் இருந்தபோது, கூடுவாஞ்சேரி தைலாவரத்தை சேர்ந்த பார்த்திபனும் (30) சிறையில் இருந்தார். அப்போது, அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. இதையடுத்து ரமேஷை தைலாவரத்தில் தனது நண்பர் வீட்டில் பார்த்திபன் தங்க வைத்துள்ளார்.