கழுத்தை அறுத்து வாலிபர் கொலையான வழக்கு மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் கொன்றோம்: பிரபல ரவுடி பரபரப்பு வாக்குமூலம்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் ரயில்வே கேட்டை ஒட்டியுள்ள ஏரிக்கரை காலி மைதானத்தில் நேற்று முன்தினம் வாலிபர் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், சென்னை எண்ணூரை சேர்ந்த பிரபல ரவுடி ரமேஷ் (34). இவர் மீது சென்னை உள்பட பல காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி, கொலை முயற்சி உள்பட 23 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், தைலாவரத்தை சேர்ந்த பார்த்திபன், ரமேஷை கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார், பார்த்திபனை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் பார்த்திபன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறியதாவது. ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட ரமேஷ் சிறையில் இருந்தபோது, கூடுவாஞ்சேரி தைலாவரத்தை சேர்ந்த பார்த்திபனும் (30) சிறையில் இருந்தார். அப்போது, அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. இதையடுத்து ரமேஷை தைலாவரத்தில் தனது நண்பர் வீட்டில் பார்த்திபன் தங்க வைத்துள்ளார்.

இதனையடுத்து, பார்த்திபன் வீட்டுக்கு  வந்து சென்ற ரமேஷ், பார்த்திபனின் மனைவியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.சிறையில் இருந்து வெளியே வந்த பார்த்திபனுக்கு இந்த விவகாரம் தெரிந்தது. இதனால், ஆத்திரமடைந்த பார்த்திபன், ரமேஷை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதையடுத்து, தைலாவரம் ரயில்வேகேட் ஏரி மைதானத்தில் தன் மைத்துனர்களான தைலாவரம் எம்ஜிஆர் தெரு செல்லமுத்து (21), வசந்த் (19), அன்னை தெரசா தெரு மணிகண்டன் (23), பிள்ளையார் கோயில் தெரு அஜீத் (23) ஆகியோருடன் சேர்ந்து மது விருந்து அளித்து திட்டமிட்டபடி மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டி கழுத்தை அறுத்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார், பார்த்திபன் உள்பட 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான பார்த்திபன் மீது காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: