விளைபொருட்களை தங்கள் விருப்பத்திற்கேற்ப விவசாயிகள் எந்தவொரு ஒழுங்குமுறை கூடங்களிலும் விற்பனை செய்யலாம்

* விற்பனை கட்டணம் ரத்து

* தனி அலுவலர் பணி காலம் நீட்டிப்பு

* தமிழக அரசு அவசர சட்டம்

சென்னை: தமிழக விவசாயிகள் விளைபொருட்களை தங்கள் விருப்பத்திற்கேற்ப எந்தவொரு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும் விற்பனை செய்யலாம் என்று தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: தமிழக விவசாயிகளின் நன்மையை கருத்திற்கொண்டு, தற்போது தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை (ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 1987-ல் கூடுதல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள, ஓர் அவசர சட்டத்தை பிறப்பிக்க தமிழ்நாடு அரசு கருதியது. இந்த அவசர சட்டம், வேளாண் விளைபொருட்களை விவசாயிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப, தமிழகத்தில் உள்ள எந்தவொரு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும், அங்கீகரிக்கப்பட்ட தனியார் சந்தைகளிலும், அங்கீகரிக்கப்பட்ட கிடங்குகள் மற்றும் குளிர்பதன மையங்களிலும் விற்பனை செய்யலாம்.

விவசாயிகள் விளைபொருட்களை தங்கள் பண்ணையிலோ அல்லது உணவு பூங்கா வளாகங்களிலோ அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதற்கும் வழிவகுக்கும். மேற்கண்ட பன்முகத்தன்மையிலான விற்பனை முறைகளில் தங்களுக்கு விருப்பமான எந்தவொரு விற்பனை முறையினையும் தேர்வு செய்து, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்யலாம். இதன்மூலமாக விளைபொருட்களுக்கு லாபகரமான விலையினை பெற்று பயனடையவும் இந்த அவசரச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

மேலும், எந்தவொரு சூழ்நிலையிலும் விவசாயிகள் தங்கள் வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்யும் பொழுது அவர்களிடம் இருந்து விற்பனை கட்டணம் வசூலிக்கப்பட கூடாது என்றும் இந்த அவசர சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அதன்படி, தமிழக அரசு பரிந்துரையின் பேரில், தமிழக ஆளுநர் அவர்கள் பின்வரும் சீர்திருத்தங்களை உள்ளடக்கிய அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளார். தமிழ்நாடு வேளாண்மை விளைபொருட்கள் விற்பனை (ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 1987-ல் சீர்திருத்தங்களை கொண்டு வருதல் மற்றும் விற்பனை குழுக்களின் தனி அலுவலர்களின் பதவி காலத்தை 29.5.2020-க்கு பின்னர், மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: