பவானி: ஈரோடு மாவட்டம் பவானிக்கும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்துக்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இரு பாலங்களில் நேற்று போக்குவரத்து துவங்கியது. கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் ஈரோடு, காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக மத்திய அரசு கடந்த மார்ச் 22ம் தேதி அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தின் எல்லைப்புற ரோடுகள் சீல் வைத்து மூடப்பட்டதோடு, பொதுமக்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்டது. இதனால், பவானியையும், குமாரபாளையத்தையும் இணைக்கும் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள பழைய மற்றும் புதிய பாலங்கள் தகர சீட்டுகள் வைத்து கட்டப்பட்டதோடு, தடுப்புகளும் வைத்து மூடப்பட்டன.
இதனால், பொதுமக்கள் நடமாட்டம் இரு நகரங்களுக்கும் முற்றிலும் முடங்கியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், தமிழக அரசு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து நேற்று முதல் அனுமதிக்கப்பட்டது. இதனால், இரு பாலங்களிலும் உள்ள தடுப்புகள் அகற்றப்பட்டு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 68 நாட்களுக்குப் பின்னர் இரு சக்கர வாகனங்கள், இலகு மற்றும் கனரக வாகனங்கள் பாலத்தில் சென்று வந்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.