மதுரை: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.9 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரிய வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்க விருதுநகர் மாவட்டத்தலைவர் ப்ரியா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகள் பொது ஊரடங்கை அமல்படுத்தியது. தமிழகம் முழுவதும் 14 லட்சம் பேர் அமைப்பு சாரா தொழிலாளர்களாக உள்ளனர். 2 லட்சம் பேர் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 15 ஆயிரம் முடி திருத்துநர்கள் உள்ளனர். 4 லட்சம் பேர் தையல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கைவினைத் தொழிலாளர்களாக 52 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். பனைமரத்தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேர், கைத்தறி தொழிலாளர்களாக 1.04 லட்சம் பேர் உள்ளனர். இது போக நடைபாதை வியாபாரிகள் பல ஆயிரம் பேர் உள்ளனர். ஊரடங்கால் அனைத்து தொழில்களும் முடங்கின. இதனால் தொழிலாளர்கள் அன்றாட வாழ்விற்கு வழியின்றி தவித்தனர். எனவே, தமிழக அரசு ரூ.ஆயிரம் நிவாரணமாக வழங்கியது. ஆனால், இது 3 வேளை உணவுக்கு கூட போதுமானதாக இல்லை.