குலசேகரம்: இந்தியாவில் வடமாநிலங்களில் ஒருவகை பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்நிலையில் இருதினங்களுக்கு முன் குமரி மாவட்டத்தில் ஒருவகை வெட்டுக்கிளிகளின் தாக்குதல் கண்டறியப்பட்டது. திருவட்டார் அருகே வெட்டுக்குழி, முளவிளை போன்ற பகுதிகளில் தோட்டங்களில் வாழை இலைகளை அவை அரித்து தின்றிருந்தன. இதுபோல் ரப்பர் மரங்கள், ரப்பர் கன்றுகள், அன்னாசி தோட்டம், மரவள்ளிக்கிழங்கு, தேக்கு மரங்கள் போன்றவற்றிலும் ஏராளமான வெட்டுக்கிளிகள் இருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்ததும் கலெக்டர் உத்தரவின் பேரில் திருப்பதிசாரம் வேளாண்மை அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் திருகுமரன் மற்றும் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வந்து சோதனை செய்தனர். மேலும் வெட்டுக்கிளிகளை படமெடுத்து கோவை வேளாண். பல்கலைக்கழக பூச்சியியல் துறைக்கு அனுப்பினர். பூச்சியியல் துறை ஆய்வில் அவை பாலைவன வெட்டுக்கிளிகள் இல்லை சாதாரண வெட்டுக்கிளி எனத்தெரியவந்தது. கேரள மாநிலத்தில் உள்ள காப்பி தோட்டங்களில் இருக்கும் இவ்வகை வெட்டுக்கிளிகள் காப்பி வெட்டுக்கிளி என்று அழைக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.