ஏற்காடு: ஏற்காட்டிற்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகளால் நோய் தொற்று அபாயம் உள்ளதாக ஏற்காடு வாசிகள் புகார் தெரிவித்ததையடுத்து, விடுதிகளில் தங்கியுள்ளவர்களை போலீசார் வெளியேற்றி வருகின்றனர். சுற்றுலா தலங்களுக்கு செல்ல அரசு தடை விதித்துள்ள நிலையில், சுற்றுலா தலமான ஏற்காட்டில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இந்நிலையில், அரசின் தடை அறிவிப்பை மீறி ஏற்காட்டிற்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் டவுன் பகுதியை தவிர்த்து கிராம பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்கி, அங்குள்ள அண்ணா பூங்கா சாலையில் உள்ள தள்ளுவண்டி கடைகள் மற்றும் ஏரிக்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் சுற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால், கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.இதையடுத்து, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு புகார் தெரிவித்ததையடுத்து, நேற்று அதிகாலை முதல் ஏற்காடு அடிவார சோதனை சாவடியில், வாகன சோதனையை போலீசார் துரிதப்படுத்தி, ஏற்காட்டை சேர்ந்தவர்ளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. நேற்று காலை முதல் ஏற்காடு செல்ல முயன்ற 400க்கும் மேற்பட்ட வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினர். வாகன சோதனையை சேலம் ரூரல் டிஎஸ்பி உமாசங்கர் பார்வையிட்டார்.