வாஷிங்டன்: ‘‘உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதை நிறுத்தினால் அத்துடன் மீண்டும் இணைவது குறித்து பரிசீலிக்கப்படும்’’ என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது.கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உண்மையை மறைத்து உலக சுகாதார அமைப்பு செயல்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அதில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் கூறியதாவது: உலக சுகாதார அமைப்பு சீரமைக்கப்பட வேண்டும். சீனாவை சார்ந்திருப்பது, அதற்கு ஆதரவாக செயல்படுவது, ஊழலை முடிவுக்கு கொண்டு வருவது உள்ளிட்ட விவகாரங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும். அப்படி செய்தால், அத்துடன் மீண்டும் சேருவது பற்றி அமெரிக்கா பரிசீலிக்கும்.