ஏடிஎம்மில் ரூ.13 லட்சம் கொள்ளையடித்த வங்கி ஊழியர் கைது

பூந்தமல்லி: மதுரவாயல் எம்எம்டிஏ காலனியில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம்  வந்த மர்ம நபர் ஒருவர், ‘ஏடிஎம் மையத்திற்கு கிருமி நாசினி தெளிக்க வேண்டும்’ என காவலாளியிடம் கூறி, நூதன முறையில் ₹13 லட்சத்தை கொள்ளையடித்து சென்றார். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில், கேமராவில் பதிவான நபர் சம்பந்தப்பட்ட வங்கியில் ஏற்கனவே பணிபுரிந்த சிவானந்தம் (36) என்பவரை போல இருப்பதும், தற்போது அவர் அம்பத்தூர் வங்கி கிளையில் பணிபுரிவதும் தெரியவந்தது. இதையடுத்து நேற்று அம்பத்தூர் வங்கி கிளைக்கு சென்று சிவானந்தத்திடம் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, ஏடிஎம்மில் பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார். இந்த வங்கியில் பணிபுரிந்தபோது ஏடிஎம்மில் பணம் நிரப்பும் பணியை இவர் செய்து வந்ததால் சாவி, ரகசிய குறியீட்டு எண் இவருக்கு தெரிந்துள்ளது.

அதை வைத்து போலியாக சாவி தயாரித்து, ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி பணத்தை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. சிவானந்தத்தின் மனைவி சென்னை தலைமை செயலகத்தில்  பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு வீட்டு கடன், வாகன கடன் என பல லட்சம்  கடன் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான மாதத்தவனை செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். எனவே, கட அடைப்பதற்காக ஏடிஎம்மில் பணத்தை கொள்ளையடித்ததாகவும்  போலீசாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, மேற்கு மாம்பலத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்று அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ₹9 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: