புதுடெல்லி: கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வராத இந்த அபாயகரமான சூழ்நிலையில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதை விட தள்ளி வைத்ததுதான் நல்லது என்று இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் தலைவர் அஜய் சிங் தெரிவித்தார். இது குறித்து அஜய் சிங் கூறியதாவது: கூட்டமைப்பின் சிறப்பான செயல்பாடுகள், பயிற்சியாளர்களின் விடா முயற்சி மற்றும் குத்துச்சண்டை வீரர்களின் திறமைகளால் நாம் முன்னேறி வருகிறாம். அதனால் ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை வீரர்களுக்கான 13 இடஒதுக்கீட்டு இடங்களையும் நாம் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு ஏற்கனவே 9 இடங்களை உறுதி செய்துள்ளோம். அதற்கு வீரர்கள், பயிற்சியாளர்கள், அலுவலர்களும், கூட்டமைப்பின் முயற்சிகளும் காரணம். அதனால் இதுவரை இல்லாத அளவுக்கு ஒலிம்பிக் போட்டியில் நமது குத்துச்சண்டை வீரர்கள் சாதிப்பார்கள். பதக்கங்களை குவிக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு பல்வேறு நவீன, அறிவியல் பூர்வமான, உலக தரத்திலான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த ஊரடங்கு நேரத்தில் வீரர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி தந்த முதல் சங்கம் நமது பிஎப்ஐதான். நமது வீரர்களின் மன உறுதியை , உடல் தகுதியை, குறையாமல் பார்த்துக் கொள்ள நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். விரைவில் தொடங்க உள்ள தேசிய முகாமில் எல்லாம் முழுமையாகும். அதனால் ஊரடங்கு நமது வெற்றியை பாதித்து விடாது.