புதுடெல்லி: காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கு முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடந்த மார்ச் மாத பிற்பகுதியில் அமெரிக்கா சென்றார். ஆனால் கொரோனா நோய் பரவல் காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டதால், அவர் அங்கேயே சிக்கினார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் தான் அவர் இந்தியா திரும்பினார். அமெரிக்காவில் இருந்து வந்ததால், அவர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்.இந்நிலையில், நேற்று அவர் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு வந்தார். தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் பங்கேற்ற கூட்டம் நடைற்றது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி வருகிற 19ம் தேதி 18 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என தேர்தல்ஆணையம் அறிவித்துள்ளது.