பஸ், காய்கனி லாரிகள் ஒரே இடத்தில் சங்கமம்; நெல்லை புதிய பஸ் நிலையத்தில் குளறுபடி: வாகன ஓட்டிகள், வியாபாரிகள் பாதிப்பு

நெல்லை: நெல்லை புதிய பஸ் நிலையத்திலிருந்து இன்று பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் அங்கு ஏற்கனவே தற்காலிகமாக செயல்படும் காய்கனி மார்க்கெட்டிற்கு வந்த லாரி உள்ளிட்ட வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்ததால் பஸ்கள் திரும்புவதிலும், வந்து செல்வதிலும் சிரமம் ஏற்பட்டது. மேலும் குறைந்த அளவில் பயணிகள் வந்ததால் பஸ் நிலைய வியாபாரிகள் கடைகளை திறக்கவில்லை. நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் தச்சநல்லூர் நயினார்குளம் அருகே செயல்பட்ட மொத்த காய்கனி விற்பனை சந்தை புதிய பஸ் நிலைய வளாகத்திற்கு மாற்றப்பட்டது.

கடந்த 65 நாட்களாக பஸ்கள் இயக்கப்படாத நிலையில் தினமும் 200க்கும் மேற்பட்ட கனரக மற்றும் சிறிய லாரிகள் பஸ் நிலையத்திற்குள் நிறுத்தப்பட்டு காய்கனி மூடைகளை தடையின்றி ஏற்றி, இறக்கி வந்தனர். மகாராஷ்டிரா, கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வரும் பல்லாரி, உருளை போன்றவைகளை டன் கணக்கில் பஸ் நிலைய பிளாட்பாரம் பகுதிகளில் அடுக்கி வைத்து பயன்படுத்தி வருகின்றனர்். இந்நிலையில் இன்று காலை 6 மணி முதல் புதிய பஸ்நிலையத்திற்குள் அரசு பஸ்கள் வரத் தொடங்கின. கன்னியாகுமரி மாவட்டம் தவிர தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு முக்கிய வழித்தடங்களுக்கு செல்லும் பஸ்கள் வழக்கமாக நிறுத்தப்படும் பிளாட்பாரங்களில் நிறுத்தப்பட்டன.

அதுபோல் மாநகர பகுதியில் இயக்கப்படும் நகர பஸ்கள், 4வது பிளாட்பார பகுதியில் நிறுத்தப்பட்டன. அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ள பிளாட்பார பகுதிகளில் சரக்குகளுடன் கூடிய லாரிகளும் நின்றன. இதன் காரணமாக அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மேலும் பஸ் நிலையத்தில் சில இடங்களில் அழுகிய காய்கனிகளும் கிடந்ததால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. மேலும் 2 மற்றும் 3ம் பிளாட்பாரம் அமைந்துள்ள மையப்பகுதிக்கு வரும் பஸ்கள் உள்புறம் திரும்ப முடியாமல் சிரமப்பட்டன. அப்பகுதியில் நிறுத்தியிருந்த லாரிகளை நீண்ட நேரத்திற்கு பின் அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டன.

பிற்பகலுக்கு பின்னர் கூடுதல் லாரிகள் பஸ் நிலையத்திற்குள் வழக்கம்போல் வந்ததால் அப்பகுதியில் மேலும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் பஸ் டிரைவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பஸ் நிலையத்தில் காய்கனி சந்தையும், பஸ் போக்குவரத்தும் தொடர்ந்து செயல்படுவது சாத்தியமில்லை. எனவே காய்கனி சந்தைகளை இடமாற்றம் செய்வதே வியாபாரிகளுக்கும், பஸ் ஓட்டுநர்களுக்கும், பயணிகளுக்கும் பயனுள்ளதாக அமையும் என்றனர்.

வியாபாரம் இல்லை

இன்று காலை 6 மணி முதல் புதிய பஸ்நிலையம் செயல்பட்டாலும் அங்கு அமைந்துள்ள கடைகளில் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு ஒருசில கடைகளே திறக்கப்பட்டிருந்தன. பயணிகள் அதிகம் வராததால் அவர்களுக்கு வியாபாரமும் இல்லை. திறந்திருந்த குளிர்பான கடை ஒன்றில் காலை 6 மணி முதல் 9 மணி வரை 10 ரூபாய்க்கு கூட வியாபாரம் நடைபெறவில்லை எனத் தெரிவித்தனர். மேலும் பஸ்நிலையத்திற்குள் அதிகாலையில் காய்கனி கழிவுகள் அதிகளவில் குவிந்து கிடந்ததால் சுகாதார குறைபாடு ஏற்பட்டது.

Related Stories: