18 மாநிலங்களவை எம்பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: 18 மாநிலங்களவை எம்பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூன் 19-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பிக்கள் திருச்சி சிவா, ரங்கராஜன், முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், சசிகலா புஷ்பா, கே.செல்வராஜ் ஆகியோர் உள்பட 17 மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 55 எம்பிக்களின் பதவிக்காலம் ஏப்.,2-ம் தேதியுடன் முடிவடைந்தது.

இதையடுத்து, காலியாகும் 55 இடங்களுக்கான தேர்தல் தேதியை கடந்த பிப்ரவரி 25-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில், மார்ச் 26-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பினால் மார்ச் 24-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. இதனால், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது, பல்வேறு தளர்வுகளை அறிவித்து வரும் மத்திய அரசு, தேர்தலை நடத்திக் கொள்ளவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி வழங்கியது. இந்த நிலையில், முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களவை எம்பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜூன் 19 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. அதன்படி, ஆந்திரா 4, குஜராத் 4, ஜார்கண்ட் 2, மத்திய பிரதேசம் 3 ஆகிய மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மேலும், மணிப்பூர் 1, மேகாலயா 1, ராஜஸ்தான் 3 இடங்களுக்கும் ஜூன் 19 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்றும் மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் அன்றே மாலை 5 மணிக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories: