விமானங்களில் நடு இருக்கையை காலியாக வைக்க வேண்டும்; குறைவான நேரம் மட்டுமே ஏசியை பயன்படுத்துக: விமான போக்குவரத்து அமைச்சகம்

டெல்லி: விமானங்களில் நடு இருக்கையை காலியாக விட முயற்சிக்க வேண்டும் என்று விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை மட்டும் அனுமதிக்கலாம், மேலும் விமானங்களில் குறைவாக நேரத்திற்கு மட்டுமே ஏசியை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா மனித வாழ்வை மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்தையும் பெரும் பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. 2 மாதங்களாக ஊரடங்கு காரணமாக உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. 2 மாதங்களுக்கு பின்னர் கடந்த 25-ந் தேதி விமான சேவை தொடங்கி உள்ளது.

ஆனாலும் கொரோனா பயத்தால் உள்நாட்டில் தனி விமானங்களை அமர்த்தி, அதன் சேவையை பயன்படுத்த வரவேற்பு இல்லை. இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை, அழைத்து வருவதற்காக வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், விமானங்களில் நடு இருக்கைகளை காலியாக வைக்க வேண்டும் என விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விமான நிறுவனங்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

சர்வதேச விமானங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றவில்லை என விமானி ஒருவர் தொடர்ந்த வழக்கில், ஜூன் 6-க்கு பிறகு நடு இருக்கைகளை காலியாக வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதேசமயம், பயணிகளின் ஆரோக்கியத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், நடு இருக்கையில் பயணிகளை அமர வைப்பது தொடர்பான புதிய விதிமுறைகளை சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் வகுக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் கூறியது குறிப்பிடத்தக்கது. இதுவரை 45 ஆயிரத்து 646 பயணிகள் பயணம் செய்ததாக மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப்சிங் பூரி தெரிவித்தார்.

Related Stories: