பட்டாபிராமில் டைடல் ஐ.டி.பார்க், திரைப்பட தொழிலாளர்களுக்கு 1000 வீடுகள்: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி!!!

சென்னை : 13 மாவட்டங்களில் ரூ.235.20 கோடியில் கட்டப்பட்ட 16 துணை மின் நிலையங்களை முதல்வர் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.  எரிசக்தித் துறையின் சார்பில் நாமக்கல் மாவட்டம்  திருச்செங்கோட்டில் உள்ள  ஏமப்பள்ளியில் 10 கோடியே 28 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 110/22 கி.வோ. துணை மின் நிலையத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கோயம்புத்தூர், தஞ்சாவூர், சேலம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 224 கோடியே 91 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 15 துணை மின் நிலையங்களையும் திறந்து வைத்தார்.

பட்டாபிராமில் டைடல் ஐ.டி.பார்க்

தொழில் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார். இப்புதிய டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவானது 10 ஏக்கர் நிலப்பரப்பில், 5.57 லட்சம் சதுரஅடி கட்டட பரப்பளவில், 21 அடுக்குமாடிக் கட்டடமாக அமையவுள்ளது. இப்பூங்கா நவீன வசதிகளுடன் கூடிய அலுவலகங்கள், தொழில் மையங்கள், பொது கட்டமைப்புகள், ஆகாயப் பூங்கா என பல்வேறு வசதிகளுடன்  அமைக்கப்படவுள்ளன. இந்த பூங்கா மூலம் சுமார் 25,000 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளை  உருவாக்கும். இத்திட்டம் 24 மாதங்களில்  முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

திரைப்பட தொழிலாளர்களுக்கு 1000 குடியிருப்பு

இதைத் தொடர்ந்து தொடர்புத் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இசைமேதை நல்லப்பசுவாமி அவர்களின் நினைவுத் தூணினை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மூலமாக செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் திரைப்படத் தொழிலாளர்களுக்கு சொந்த வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ்,  6,000 குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 1000 குடியிருப்புகள் கட்டும் பணிக்கும் அடிக்கல் நாட்டினார்.இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் தங்கமணி, அமைச்சர் சம்பத், அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் சண்முகம், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: