சென்னை: தென்மேற்கு பருவமழை இன்று முதல் கேரளாவில் தொடங்குவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று வெயில் குறைவாக இருந்தது. இரண்டு மாவட்டங்களில் மட்டும் வெயிலின் தாக்கம் 40டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருந்தது. பிற மாவட்டங்களில் சராசரியாக 38 முதல் 39 டிகிரி செல்சியசாக இருந்தது. இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 70 மிமீ மழை பெய்துள்ளது. வால்பாறை, ஆலங்காயம், திருப்பூர் 30மிமீ, சூளகிரி 20 மிமீ மழை பெய்துள்ளது. இது தவிர ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்துள்ளது. இதையடுத்து, வெப்ப சலனம் காரணமாக தென் தமிழகம், உள் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
இதற்கிடையே, கடந்த சில நாட்களாக தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்று சுழற்சி தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. அது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். நாளை இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் மேற்கு கடற்கரையை ஒட்டி வடக்கு திசையில் நகரும். இதன் காரணமாக தென் கிழக்கு, தென் மேற்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய, மேற்கு மத்திய அரபிக் கடல், லட்சத்தீவு மற்றும் கேரளா கடலோரப் பகுதியில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசும். இடையிடையே மணிக்கு 65 கிமீ வேகத்திலும் காற்று வீசும். அதனால் இன்று முதல் 4ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.