விவசாயம், விவசாயிகளை குறிவைத்தே கடந்த சில ஆண்டாக தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் கணைகளை தொடுத்து வருகின்றன என்ற வேதனை குமுறல்கள் அடிமட்ட ஏழை விவசாயிகளிடம் உள்ளது. காரணம், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகள் ஒவ்வொன்றாக பறிக்கும் செயல்கள் அரங்கேறி வருகின்றன. ஒரு பக்கம் இயற்ைக அடிக்கடி, ஏன் ஆண்டாண்டுக்கு சதி செய்து வருகிறது. இன்னொரு பக்கம், காவிரி டெல்டா பகுதிகளில் வறட்சி பூமியாகி விட்டது. காவிரி நீர் போதுமான அளவுக்கு கிடைத்தது என்று சொல்லியே பல ஆண்டுகளாகி விட்டது. காவிரி நீர் கானல் நீராகி வருகிறது. அப்படியே கர்நாடக உபரி மழை நீர் வெள்ளத்தால் மேட்டூர் அணை நிரம்பினாலும் கடைமடைக்கு என்றில்லை...பாதி வழி கூட சரிவர விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை காவிரி நீர்.
காரணம், தூர்வாருவதற்கு கூட சாதாரண விவசாயி இப்போதெல்லாம் போராட வேண்டிய காலமாகி விட்டது. அரசு நிதி ஒதுக்குகிறது. ஆனால், பணம் எங்கே பாகிறது; தூர் வாரப்பட்டதா என்றால் விவசாயிகள் கொதித்து போய் விடுவர். காரணம், தூர்வாரியதாக கணக்கு காட்டுவதே வழக்கமாகி விட்டது. இப்படி அடுத்தடுத்து சதிகளை சந்தித்த விவசாயிகளுக்கு இப்போது தலையில் இடி விழுந்துள்ள விஷயம், இலவச மின்சாரம் ரத்து என்ற அறிவிப்பு தான். வழக்கம் போல, விவசாயிகளை கைவிட மாட்டோம் என்று கர்ஜனை செய்யும் தமிழக அரசு, மத்திய அரசுக்கு பணிந்து, நியாயப்படுத்தும் அளவுக்கு சென்று விடும் என்ற அச்சமும் விவசாயிகளிடம் உள்ளது. ஒரு ஆண்டுக்கு முன்பே, கான்ட்ராக்ட் விவசாயம் என்ற பெயரில் விவசாயத்தை கபளீகரம் செய்யும் அரசின் போக்கு விவசாயிகளுக்கு பீதியை கிளப்பியது. அதை குறிவைத்து தான் இலவச மின்சாரம் ரத்து செய்ய சதி நடக்கிறது என்று பேசத்துவங்கி விட்டனர்.