உடுமலை: உடுமலை அருகே உள்ள அமராவதி அணையை நோக்கி தாகம் தணிப்பதற்காக காட்டு யானைகள் கூட்டம் படையெடுத்து வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, அமராவதி வனசரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் செடி, கொடி, மரங்கள் காய்ந்து வருகின்றன. வனப்பகுதியில் உள்ள ஊற்று, அருவி, தடுப்பணை உள்ளிட்டவையும் வறண்டு காட்சி அளிக்கின்றன. இதனால் வனவிலங்குகள் இரைதேடி இடம் பெயர துவங்கியுள்ளன. குறிப்பாக யானைக்கூட்டங்கள் இரை மற்றும் தண்ணீர் தேடி உடுமலை, அமராவதி வனச்சரகத்தை விட்டு அமராவதி அணை நோக்கி வனச்சாலைகளை கடந்து செல்கின்றன. உடுமலை-மூணார் மலை வழிப்பாதையின் ஓரமாக கூட்டம், கூட்டமாக மாலை நேரத்தில் நிற்கின்ற யானைக்கூட்டம் பின்னர் மெதுவாக குட்டிகளை அழைத்துக் கொண்டு அமராவதி அணைக்குள் இறங்குகின்றன.