சத்தியமங்கலம்: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள காகித ஆலைகள் கடும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் சுற்று வட்டாரப் பகுதியில் 10 காகித ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள காகித ஆலைகளில் நியூஸ் பிரிண்ட், புத்தகங்கள் அச்சடிக்க தேவையான காகிதம், டியூப்க்ஸ்போர்டு மற்றும் கிராஃப்ட் பேப்பர் உள்ளிட்ட பல்வேறு வகையான காகிதங்கள் மற்றும் அட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் காகிதங்கள் பல்வேறு செய்தித்தாள் நிறுவனங்களுக்கும், சிவகாசியில் உள்ள காலண்டர், புத்தகம் அச்சிடும் அச்சகங்களுக்கும், வெளி மாநிலங்களில் உள்ள பல்வேறு நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 மாத காலமாக ஆலைகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 50 சதவீத பணியாளர்களை கொண்டு ஆலைகளை இயக்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் மூலப்பொருட்கள் கிடைக்காதது மற்றும் ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்ட பேப்பர்கள் விற்பனை செய்யப்படாமல் உள்ளதால் பெரும்பாலான தொழிற்சாலைகளில் உற்பத்தி தொடங்கவில்லை.
இது குறித்து சத்தியமங்கலம் அருகே செயல்பட்டு வரும் தனியார் காகித ஆலை நிர்வாக மேலாளர் செந்தில்குமார் கூறியதாவது: கொரோ னா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக காகித ஆலைகள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளன. காகித ஆலைகளுக்கு தேவையான மூலப் பொருட்களான பழைய காகிதங்கள் மற்றும் அட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் தேவைப்படும் அளவிற்கு கிடைக்கவில்லை.