ஊட்டி : கொரோனா வைரஸ் காய்ச்சல் காரணமாக ஊட்டியில் உள்ள உழவர் சந்தை பொது இடத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஒன்றிணைந்து உழவர் சந்தையை பொலிவுபடுத்தியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தி வருகிறது. சமூக பரவலை தடுக்கும் நோக்கில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், அனைத்து கடைகளும் மூடப்பட்டன. மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் மற்றும் உழவர் சந்தை போன்றவைகள் குறுகலாகவும், போதிய இடம் இல்லாமல் இருந்த நிலையில், மக்கள் நெருக்கத்துடன் காணப்பட்டனர்.இதனால், இவைகள் பொது இடத்திற்கு மாற்ற அரசு உத்தரவிட்டது. இதன்படி, ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் இருந்த உழவர் சந்தை ஏடிசி., பகுதிகளில் உள்ள சாந்திவிஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டது.