டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு ரூ.48 ஆயிரம் மதிப்பு மதுபாட்டில்கள் கொள்ளை: தேவகோட்டையில் பரபரப்பு

தேவகோட்டை: தேவகோட்டையில் டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு ரூ.48 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவகோட்டை ஒத்தக்கடை ஆற்றுப்பாலம் அருகில் அரசு டாஸ்மாக் மதுபான கடை (எண் 7509) உள்ளது. இங்கு விற்பனை மேலாளராக முத்துச்சாமி என்பவர் உள்ளார். நேற்று முன்தினம் இரவு (மே 29) முத்துச்சாமி விற்பனை நேரம் முடிந்ததும் வழக்கம்போல் கடையை பூட்டி சென்றார். நேற்று காலை கடையை திறந்தார். அப்போது கடையின் பின்புறம் சுவரை துளைபோட்டு மர்மநபர்கள் மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.48 ஆயிரமாகும். மேலும் கொள்ளையடிப்பதற்கு முன் கடையில் இருந்த மதுபாட்டில்களை குடித்து விட்டு சென்றது தெரிந்தது. இதுகுறித்து தேவகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  சிவகங்கையில் இருந்து கைரேகை, தடவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர்.

Related Stories: