திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயில் யானை தெய்வானையின் உடல் வெப்பத்தை தணிக்க தற்போது ‘ஷவர்’ குளியலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே யானை குளிக்க நீச்சல் குளம் கட்டப்பட்டும், அதை பயன்படுத்தபாமல் இருப்பது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் யானை தெய்வானை கடந்த 24ம் தேதி காளிதாஸ் என்ற பாகனை தாக்கியது. இதில் பாகன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனைத்தொடர்ந்து வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவ துறையினர் யானையை பரிசோதனை செய்தனர். மருத்துவ குழுவினர் யானைக்கு உணவு உட்பட பல்வேறு விசயங்களை பரிந்துரை செய்தனர். அதனடிப்படையில் தற்போது கோடை காலம் என்பதால் யானையின் உடல் வெப்பத்தை தணிக்கும் வகையில் தினமும் இரண்டு அல்லது மூன்று வேளைகள் குளிக்க வைக்கவும் பரிந்துரை செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கோயில் வளாகத்தில் யானை தங்கும் இடத்தில் புதிதாக 12 ஷவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று 31ம் தேதி முதல் யானைக்காக அமைக்கப்பட்ட ஷவரில் குளிக்க வைக்கப்படும் என அலுவலக வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.