புவனேஸ்வர்:
ஒடிசாவின் அரசு நிறுவனமான உத்காலிகா ஹேண்ட்லூம் நிறுவனம்தான் இந்த
ஆர்கானிக் மாஸ்க்கை அறிமுகம் செய்துள்ளது. சம்பல்புரி பருத்தி துணியால்
கைகளால் இந்த மாஸ்க் நெய்யப்படுகிறது. அதில் ஆர்கானிக் சாயம் போடப்பட்டு பல
வண்ணங்களில் தயாரிக்கப்படுகிறது. இந்த துணி மிக மிருதுவாக இருப்பது
வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், பலமுறை துவைத்து
உபயோகப்படுத்த முடியும் என்பதால் ஆர்கானிக் மாஸ்க்கின் விற்பனை சக்கைப்போடு
போடுவதாக உத்காலிகா நிர்வாக இயக்குநர் அஞ்சனா பாண்டா கூறி உள்ளார்.
அவர்
கூறுகையில், ‘‘துணியால் ஆன மாஸ்க்கை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டுமென
டாக்டர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த சமயத்தில் எந்த பாதிப்பும்
ஏற்படுத்தாத ஆர்கானிக் மாஸ்க் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை
பெற்றுள்ளது’’ என்றார். மேலும், மாஸ்க் தயாரிப்பு மற்றும் விற்பனையின்
மூலம் சிறு குறு கைவினைஞர்களும், சுய உதவிக்குழு பெண்களும் பலனடைவர் என
உத்காலிகா கூறுகிறது.