கொரோனா அச்சம் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: கொரோனா அச்சம் காரணமாக நடப்பாண்டின் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:  2020-21ம் ஆண்டு இளநிலை மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ஏற்கனவே அறிவித்தவாறு ஜூலை 26ம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ள தேசிய தேர்வு முகமை, அதற்கான ஏற்பாடுகளையும் தொடங்கியிருக்கிறது. கொரோனா அச்சம் காரணமாக மாணவர்கள் இப்போது எதிர்கொண்டு வரும் சூழலில் நீட் தேர்வை நடத்துவது குரூரமான கடமை உணர்வாக பார்க்கப்படும். சென்னை போன்ற நகரங்களில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள ஒவ்வொரு மாணவனின் தெருவிலும் குறைந்தது ஒருவர் அல்லது இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தாக்கிவிடக் கூடாது என்ற அச்சத்திலும், மன உளைச்சலிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், அவர்களால் எப்படி நீட் தேர்வை எழுதுவதற்கு தயாராக முடியும்? இந்தியாவில் ஒரு சில மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் இன்னும் 12ம் வகுப்பு தேர்வுகள் நடத்தி முடிக்கப்படவில்லை. ஜூலை 15 வரை பொதுத்தேர்வுகளுக்கு 12ம் வகுப்பு மாணவர்கள் தயாராக வேண்டிய சூழலில், அடுத்த 10 நாட்களில் நீட் தேர்வுக்கு மாணவர்களால் தயாராக இயலாது.  எனவே நடப்பாண்டில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை கைவிட்டு, 12ம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை அரசு நடத்த வேண்டும்.

Related Stories: