சென்னை: கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக ஆர்டிஓ அலுவலகங்களில் விண்ணப்பப்படிவங்களை பெறுவதற்கு பிரத்யேகமான தனி பெட்டியை (டிராப் பாக்ஸ்) பயன்படுத்த வேண்டும் என போக்குவரத்துத்துறை கமிஷனர் ஜவஹர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் 4ம் கட்ட ஊரடங்கின்போது சில தளர்வுகள் வழங்கப்பட்டது. அந்தவகையில் தமிழக அரசு கடந்த 18ம் தேதி முதல் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து ஆர்டிஓ அலுவலகங்கள் செயல்பட துவங்கின. இந்நிலையில் ஆர்டிஓ அலுவலகங்களில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை குறித்து தமிழக போக்குவரத்துத்துறை கமிஷனர் ஜவஹர், அனைத்து மண்டல அலுவலகங்கள், இணை ஆணையர்கள், ஆர்டிஓ அலுவலகங்கள், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: கோவிட்-19 பரவுதலை கட்டுப்படுத்துவதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தலின் கீழ் உள்துறை அமைச்சகத்தால் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.