சென்னை: அமைச்சர் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டவரின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்தை வெளியிட்டதாக பண்ருட்டியை சேர்ந்த பாலாஜி என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் கோரி பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து, தனக்கு முன்ஜாமீன் கோரி பாலாஜி மீண்டும் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீண்டும் நீதிபதி வேலுமணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவியல் கூடுதல் வக்கீல் என்.ஜோதிகுமார் ஆஜராகி, மனுதாரர் அமைச்சர் குறித்து பொய்யான தகவல்களை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார். எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.