கொரோனா எல்லாம் எங்களுக்கு தண்ணி அடிக்கிற மாதிரி வைரசுக்கே டாடா காட்டிய அமெரிக்காவின் ‘செஞ்சுரி’ பாட்டி: மகிழ்ச்சியில் பீர் குடித்து கொண்டாட்டம்

நியூயார்க்: அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பகுதியைச் சேர்ந்த 103 வயது மூதாட்டி ஜெனி ஸ்டெனாவை சமீபத்தில் கொரோனா வைரஸ் தாக்கியது. இதையடுத்து அவர் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மூப்பு காரணமாக, அவரது உடல்நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தது. ஒரு கட்டத்தில் அவர் இறந்துவிடுவார் என்று கூட உறவினர்களிடம் கூறப்பட்டுள்ளது. ஆனால், நம்பிக்கையை கைவிடாமல் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். பாட்டியும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார். இதனால் மூன்று வார சிகிச்சைக்கு பிறகு ஜெனி ஸ்டெனா முழுமையாக குணமடைந்துள்ளார். கடைசியாக எடுத்த பரிசோதனையில் அவருக்கு வைரஸ் இல்லை என்று தெரியவந்தது.

இந்த தகவலை பாட்டியிடம் டாக்டர்கள் தெரிவித்தபோது அவர் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். அவரது குடும்பத்தினருக்கும் சந்தோஷம் தாங்க முடியவில்லை. இந்நிலையில், பாட்டி ஆசைப்பட்டு தனது குடும்பத்தினரிடம் சில்லென்று ஒரு டின் பீர் வேண்டும் என்று கேட்டுள்ளார். அவரது உறவினர்கள் டாக்டர்களிடம் கேட்க, அவர்களும் தரலாம் என்று கூறிவிட்டனர். இதையடுத்து அவரது குடும்பத்தினர் டின் பீரை சில்லென்று கொண்டு வந்து கொடுத்தனர். அதை சாப்பிட்டபடி தனது பேரன், பேத்திகளின் செல்பீகளுக்கும், போட்டோக்களுக்கும் அவர் போஸ் கொடுத்து அசத்தினார்.

Related Stories: