சென்னை: கொரோனாவிற்கு சித்த மருத்துவ முறையில் முழுக்க முழுக்க சிகிச்சை அளிக்கும் முறை ஜூன் மூன்றாம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் தற்போது வரை 13 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அலோபதி மற்றும் சித்த மருத்துவ கூட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்நிலையில் முழுவதும் சித்த மருத்துவ அடிப்படையில் முழுக்க முழுக்க கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் முறையை செயல்படுத்த சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக 100 படுக்கைகள் கொண்ட தனி வார்டு சாலிகிராமத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் அமைக்கப்பட்டு வருகிறது.