சென்னை: சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த 59 வயது நபர், புரசைவாக்கத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 21ம் தேதி கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, கடந்த 28ம் தேதி இவர் குணமடைந்து விட்டதாக கூறிய மருத்துவர்கள், அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் அவர் தனிமையில் இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.