சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க 3 சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு அரசு வழிகாட்டுதல்படி பிரசவ தேதி குறிக்கப்படும். அதற்கு 5 நாட்களுக்கு முன்பாக கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் பரிசோதனையின் முடிவில் பல கர்ப்பிணிகளுக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத இறுதியில் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட கர்ப்பிணிகளின் எண்ணிக்கை 33ஆக இருந்த நிலையில், மே மாதத்தில் நோய் பாதிப்பிற்கு ஆளாகும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.