×

ஹாங்காங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை: இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் முடிவு

லண்டன்: ஹாங்காங்கை கட்டுப்படுத்தும் புதிய சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டங்களை சீனா அமுல்படுத்தும் நிலையில் ஹாங்காங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து  குடியுரிமை வழங்க இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. இங்கிலாந்தின்  இந்த முடிவு சீனாவை வெறுப்படையச் செய்துள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் ஹாங்காங் இருந்தாலும் அதற்கென சுயாட்சி உரிமைகள் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த உரிமைகளைப் பறிக்கும் வகையில் கடந்த ஆண்டு ஒரு சட்டத்தைச் சீனா கொண்டு வந்தது. அதன்படி ஹாங்காங்கில் அரசுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரைச் சீனாவுக்குக் கடத்தி விசாரிப்பது உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தது.

மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தியதால் தற்காலிகமாக அந்த சட்ட மசோதா நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவியிருக்கும் நேரத்தில் சீனா அரசு சத்தமில்லாமல் ஹாங்காங் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளது. முன்பு ஹாங்காங் இங்கிலாந்து கட்டுப்பாட்டில் இருந்துள்ளதால் அங்குள்ளோரில் பலர் வெளிநாடுவாழ் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்களாக உள்ளனர். ஆகவே சீனா அவர்களை ஒடுக்க முயலும் நேரத்தில் தன் குடிமக்கள் என்ற முறையில் அவர்கள் மீதான அக்கறையால் இங்கிலாந்து சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி 350,000 வெளிநாடுவாழ் நாட்டினரின் விசா உரிமைகளை நீட்டிக்க இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.

இது குறித்துப் பேசிய வெளியுறவுச்செயலர் டொமினிக் ராப்  வெளிநாடுவாழ் இங்கிலாந்து நாட்டினரின் விசா உரிமைகள் ஆறு முதல் 12 மாதங்கள் வரை நீட்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது எதிர்காலத்தில் இங்கிலாந்து குடியுரிமை பெறுவதற்கு உதவிகரமாக இருக்கும். ஆனால் இன்னொருபக்கம், புலம்பெயர்தலை கட்டுப்படுத்துவதற்காக நீண்ட காலம் போராடி இப்போதுதான் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியே கொண்டுவந்திருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியினர் பல்லாயிரக்கணக்கான ஹாங்காங் குடிமக்கள் இங்கிலாந்திற்குள் வருவதை எதிர்கொள்ள தயாராக இருப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Tags : Millions ,UK ,Citizens ,Hong Kong ,Interior Ministry , Hong Kong, Millions of Citizens, UK Citizenship, Home Ministry
× RELATED உலகம் முழுவதும் ரமலான் நோன்பு தொடக்கம்