மகாராஷ்டிராவில் பொது இடங்களில் எச்சில் துப்புவோர், புகைபிடிப்போருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை!!

மும்பை : மகாராஷ்டிராவில் பொது இடங்களில் எச்சில் துப்புவோர், புகைபிடிப்போருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டங்களில் திருத்தங்களைச் சேர்க்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. புகை பிடிப்பவர்கள் மற்றும் புகையிலை பயன்படுத்துவோருக்கு பொது இடங்களில் எச்சில் துப்பும் வழக்கம் உள்ளது. இதனால் கொரோனா வைரஸ், காசநோய், பன்றிக் காய்ச்சல், மூளை அழற்சி நோய் போன்ற தொற்று நோய்கள் பரவும் ஆபத்து உள்ளது. புகையிலை பயன்பாடு உலக அளவில் பொது சுகாதாரத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. எனவே புகையிலை பொருட்கள் விற்பனைக்கும், பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கும் எச்சில் துப்புவதற்கும் தடை விதிப்பதன் மூலம் சுத்தமான, சுகாதாரமான இந்தியாவை அடைய முடியும்.

இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. பொது இடங்களில் எச்சில் துப்பினால் ஆறு மாதம் வரை சிறைத் தண்டனை விதிக்கவும், மீண்டும் அதே தவறைச் செய்தால் 2 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கவும் வகை செய்யும் திருத்தங்களைத் தொற்றுநோய்ச் சட்டத்தில் சேர்க்க உள்ளது.

இது குறித்து மாநில நலவாழ்வுத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள வீடியோவில், பொது இடங்களில் எச்சில் துப்பினால் முதன்முறை ஆயிரம் ரூபாயும், இரண்டாம் முறை மூவாயிரம் ரூபாயும், மூன்றாம் முறை ஐயாயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Related Stories: