ஊரடங்கு நீட்டிப்பா? தளர்வா? இன்று முக்கிய முடிவு; டெல்லியில் பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் ஆலோசனை...!

புதுடெல்லி: நாடு முழுவதும் பொது ஊரடங்கு நாளையுடன் முடியவுள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும்  தேசிய ஊரடங்கு கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, 4 கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 4ம் கட்ட ஊரடங்கு நாளை நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. இதனால்,  தேசிய ஊரடங்கு இதோடு விலக்கிக் கொள்ளப்படுமா அல்லது நீட்டிக்கப்படுமா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, சில மாநில முதல்வர்கள் ஊரடங்கை மேலும் நீட்டிக்க விருப்பம் தெரிவித்ததாக  கூறப்படுகிறது. அதே சமயம், பொருளாதார நடவடிக்கைகளை படிப்படியாக தொடங்கி இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான தளர்வுகளும் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதை தொடர்ந்து உள்துறை அமித்ஷா  நேற்று பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், ஊரடங்கின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் மேற்கொள்ள வேண்டிய தளர்வுகள் குறித்தும் பிரதமர் மோடி தனது இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.  இதற்கிடையே, இந்தியாவில், டெல்லி, மும்பை, புனே, தானே, அகமதாபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, ஐதராபாத், சென்னை திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நகரங்களில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 70% பேர் இந்த 13 நகரங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

எனவே 13 நகரங்களிலும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மற்ற நகரங்களில் ஊரடங்கை நீட்டிக்கும் முடிவை மாநில முதல்வர்களிடமே விட்டுவிட மத்திய அரசு  தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 5ம் கட்ட ஊரடங்கில் கோயில்களில் வழிபாடுகள் நடத்த அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது. வணிக வளாகங்கள், திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள் செயல்படுவதற்கான தடை  5ம் கட்ட ஊரடங்கிலும் நீட்டிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த மார்ச் 25ம் தேதி 21 நாட்களுக்கும், பின் 17 நாட்களுக்கும் அடுத்து இருமுறை தலா 14 நாட்களுக்கும் என 4 கட்டமாக 68 நாட்களாக ஊரடங்கு அமலில்  உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: