ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பாலைவன வெட்டுக்கிளிகள் இல்லை என ஆய்விற்கு பின் கோவை வேளாண் பல்லைக்கழக பூச்சியியல் துறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். பாகிஸ்தானில் இருந்து லட்சக்கணக்கில் இடம் பெயர்ந்த பாலைவன வெட்டுக்கிளிகள் தற்போது வட மாநிலங்களில் விவசாய நிலங்களை அழித்து வருகின்றன. பல ஏக்கர் பரப்பளவில் உள்ள விளைநிலங்களை துவம்சம் செய்து வரும் இந்த வெட்டுக்கிளிகளை அழிக்க முடியாமல் பாதிக்கப்பட்ட மாநில அரசுகள் திணறி வருகின்றன. இந்த வெட்டுக்கிளிகள் நீலகிரி மாவட்டம் மற்றும் கேரள மாநில எல்லைகளில் காணப்படுவதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து தோட்டக்கலைதுறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ் தலைமையில் ஆய்வு மேற்கொண்டதில், வெட்டுக்கிளிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வரவில்லை. இங்கு சாதாரண வெட்டுக்கிளிகளே உள்ளன என தெரியவந்துள்ளது.நேற்று கோவை வேளாண் பல்லைக்கழக பூச்சியில் துறை தலைவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி பேராசிரியர்கள் கொண்ட குழுவினர் ஊட்டியில் உள்ள காந்தல் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள விவசாய நிலங்கள், சோலை மற்றும் புல்வெளிகளில் இந்த ஆய்வு நடந்தது.