மூணாறு: கேரளாவில் மது வாங்கும் முன்பதிவு செயலியான ‘பெவ் கியூ’வில் ஏற்பட்ட கோளாறால், டோக்கன் பெற்று மது வாங்கமுடியாமல் குடிமகன்கள் கடும் ஏமாற்றமடைந்தனர். இதனால் மூணாறு பகுதிகளில் அரசு மதுபானக் கடைகளில் விற்பனை முடங்கியது. கேரள மாநிலத்தில், கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட மதுக்கடைகள், பார்கள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. குடிமகன்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த அம்மாநில அரசு, ‘பெவ் கியூ’ என்ற செயலியை அறிமுகம் செய்தது. கொச்சியில் செயல்படும் ஸ்டார்ட் அப் நிறுவன உதவியுடன் தயாரிக்கப்பட்ட இந்த செயலியை கூகுள் இணையத்தில் பதிவிறக்கம் செய்து மது வாங்கும் நபரின் பெயர், அஞ்சல் குறியீடு, தொலைபேசி எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். பின்னர் கிடைக்கும் டோக்கன் மூலம் மது வாங்கலாம் என கேரள அரசு அறிவித்தது. இம்முறையில் மது வாங்குவதற்காக நேற்று முன்தினம் மட்டும் 2.25 லட்சம் பேர் பதிவு செய்தனர்.