திருமலை: ஆந்திர மாநில தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்ட ரமேஷ் குமார், சில மாதங்களுக்கு நடந்த உள்ளாட்சி தேர்தல் பணிகளில் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக ஆளும் கட்சியினர் குற்றம்சாட்டினர். இதற்கிடையே, ரமேஷ் குமாரை பணி நீக்கம் செய்து, சென்ைன உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கனகராஜுவை புதிய தேர்தல் ஆணையாளராக முதல்வர் ஜெகன் மோகன் நியமனம் செய்தார். அவரும் பதவி ஏற்றுக்கொண்டார்.இதை எதிர்த்து ரமேஷ் குமாரும், முன்னாள் பாஜ அமைச்சர் காமிநேனி சீனிவாசும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி, ஆந்திர மாநில அரசு வெளியிட்ட அரசாணையை நேற்று அதிரடியாக ரத்து செய்து ரமேஷ் குமாரை மீண்டும் மாநில தேர்தல் ஆணையராக நியமித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும், மாநில தேர்தல் ஆணையரின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கும் அரசாணையையும், புதிய தேர்தல் ஆணையராக நீதிபதி கனகராஜ் நியமிக்கப்பட்ட உத்தரவையும் நீதிபதி ரத்து செய்தார். இந்த உத்தரவு, முதல்வர் ஜெகன் மோகனுக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
‘தனிநபர் அதிகாரம் நிரந்தரமல்ல’
தீர்ப்பு குறித்து மாநில தேர்தல் ஆணையாளர் ரமேஷ்குமார் கூறுகையில், ‘உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி மாநில தேர்தல் ஆணையாளராக மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளேன். உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளேன். தனிநபர் அதிகாரம் நிரந்தரமல்ல, அரசியலமைப்பு, அவற்றின் மதிப்புகள் நீடித்தவை,’’ என்றார்.