சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. ஆனால் தமிழகத்தில் இறப்பு விகிதம் 0.7% இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அடிக்கடி கூறி மகிழ்ச்சி அடைவது மிகுந்த வேதனையை தருகிறது. கொரோனா பாதிப்பு பற்றி அவர் கவலைப்படுவதாக தெரியவில்லை. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிப்பது கண்டனத்திற்குரியது. இத்தகைய செயல்களின் மூலமாக வேகமாக பரவி வரும் கொரோனாவை தமிழக அரசால் எதிர்கொள்ள முடியுமா என்கிற மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. இத்தகைய அவலநிலையில் இருப்பதை உணர்ந்து போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு செயல்பட வேண்டும்.