ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமீன் எதிர்த்து அரசு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பிக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் இன்று அறிவிக்கிறது. கடந்த பிப்ரவரி 14ம் தேதி கலைஞர் வாசகர் வட்டம் சார்பில், நடத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்து கொண்ட .ஆர்.எஸ்.பாரதி பட்டியலினத்தவருக்கு எதிராக பேசியதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதுதொடர்பாக ஆதி தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் அளித்த புகாரின் அடிப்படையில், தேனாம்பேட்டை காவல்நிலையத்தில்  வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஆர்.எஸ்.பாரதிக்கு, மே 31ம் தேதி வரை இடைக்கால முன்ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப் பிரிவு தரப்பில்  மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவும், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகும் தினத்தில் ஜாமீன் வழங்க உத்தரவிடக் கோரி ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவும் நீதிபதி நிர்மல்குமார் முன் நேற்று  விசாரணைக்கு வந்தன.

ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சண்முக சுந்தரம், இடைக்கால முன்ஜாமீனை ரத்து செய்யக் கூடாது என வாதிட்டார்.  நீதிமன்றத்தில் ஆஜராகும் தினத்தில் அவருக்கு ஜாமீன் வழங்க உத்தரவிடவும் கோரினார். அப்போது அரசு தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி, புகார்தாரரை விசாரிக்காமல் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இடைக்கால முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல்குமார், இரு மனுக்கள் மீதான தீர்ப்புகளை இன்று அறிவிப்பதாக தெரிவித்தார்.

Related Stories: