செங்கல்பட்டு : செங்கல்பட்டு அடுத்த திருப்போரூர் கூட்ரோடு சாந்தி நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(65). ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி. கடந்த 2 நாட்களுக்கு முன் பாலகிருஷ்ணன், குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று மதியம், பாலகிருஷ்ணன் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக அவருக்கு, செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் பாலகிருஷ்ணன் அங்கு சென்றார்.அப்போது, வீட்டில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த கம்மல், வளையல், செயின் உள்பட 50 சவரன் நகைகள், அரைகிலோ வெள்ளி பொருட்கள், 30 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.