பபுள்கம்மை குச்சி முனையில் ஒட்டி வைத்து கோயில் உண்டியலில் நூதன திருட்டு: வாலிபர் கைது

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் பகுதியில் உள்ள கோயில் உண்டியலில், நூதன முறையில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பக்கத்தில் ஆட்சீஸ்வரர் கோயில் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் இந்த கோயிலில் இருந்து ஒரு வாலிபர் வெளியே செல்வதை, பொதுமக்கள் பார்த்தனர். உடனே, கோயில் நிர்வாகத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் அங்கு சென்று அங்கிருந்த கேமராவை ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவு நேரத்தில் கோயிலுக்கு வந்து, பபுள்கம் நன்கு மென்று, நீண்ட குச்சியின் முனையில் ஒட்டி உண்டியலில் உள்ள துவாரத்தின் வழியாக உள்ளே விட்டு அதில் ஒட்டிக்கொள்ளும் ரூபாய் நோட்டுகளை எடுக்கும் காட்சி பதிவாகியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுபோல், அவர் பலமுறை, அந்த குச்சியை விட்டு, ரூபாய் நோட்டுகளை வெளியே எடுத்து சேகரித்து கொண்டு கோயிலை விட்டு வெளியேறினார். இதையடுத்து வீடியோவில் பதிவான உருவத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அச்சிறுப்பாக்கம் பள்ளிபேட்டையை சேர்ந்த மாணிக் பாட்ஷா (20) என தெரிந்தது.

இதையடுத்து போலீசார், வழக்குப்பதிவு செய்து மாணிக் பாட்ஷாவை கைது செய்தனர்.

Related Stories: