சென்னை: பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளிலிருந்து, 45 எம்டிசி பேருந்துகள் கட்டண அடிப்படையில் இயக்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து எம்டிசி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நேற்று முன்தினம் முதல் மேனிலைத்தேர்வு (பிளஸ்2) விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இப்பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் தாம்பரம் -கிழக்கு, மேற்கு, செங்குன்றம், வேலம்மாள் சூரப்பட்டு, போலிவாக்கம் ஆகிய இடங்களுக்குச் சென்றுவர ஏதுவாக, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 45 பேருந்துகள் கட்டண அடிப்படையில் இயக்கப்படுகின்றன. விடைத்தாள் திருத்தும் பணி முடிவடையும் வரையில் பேருந்துகள் இயக்கப்படும்.
அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள், தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம், எழிலகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றுகின்ற அலுவலர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் 50 சதவீதம் பேர் பணிக்கு வந்து செல்ல ஏதுவாக, மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 300 பேருந்துகள் கட்டண அடிப்படையில் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.