×

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: விவசாயிகளுக்கு  வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தை கைவிட  வேண்டும் என்று பிரதமருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் புதிய மின்சாரத் திருத்தச் சட்டத்தை (2020) திரும்பப் பெற வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் திமுகவை சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர். அதோடு, இதை குறிப்பிட்டு, மாநில உரிமைகளையும், கூட்டாட்சி தத்துவத்தையும் பாதுகாத்திடும் திமுக முயற்சிக்கு துணை நிற்கும்படி பா.ஜ. மற்றும் பா.ஜ. கூட்டணி இல்லாத மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு மட்டுமல்ல, நமது நாடு சிறந்து விளங்குவதற்கு இன்றியமையாத பங்களிப்புகளைச் செய்துள்ளார்கள். பல ஆண்டுகால போராட்டங்களுக்கு பிறகே அவர்களது உரிமைகள் நிலைநாட்டப்பட்டன. அத்தகைய போராட்டங்களில், மிக முக்கியமானது, தமிழ்நாட்டில் “மின் கட்டணக் குறைப்பு” மற்றும் “இலவச மின்சாரம்” ஆகியவற்றை வலியுறுத்தி அப்போதைய விவசாயிகள் சங்கத் தலைவர் மறைந்த நாராயணசாமியின் தலைமையில் கோயம்புத்தூரில் நடந்த மாபெரும் போராட்டமாகும்.

இதை தொடர்ந்து, 1989ல் நடந்த பொது தேர்தலுக்காக திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் “விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்” என்று வாக்குறுதியை கலைஞர் அளித்தார். 13 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்து - மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்ற கலைஞர் இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தினார். அத்திட்டம் 1990லிருந்து இன்றுவரை செயல்பட்டு வருகிறது. இந்த திட்டம்தான் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூணாக விளங்கி, உணவுப் பற்றாக்குறையை போக்கியதுடன் லட்சக்கணக்கான விவசாயிகளைப் பாதுகாத்தது. இத்தகைய திட்டத்தை முடக்கும் விதமாக, லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் விதமாகவும் மின்சார திருத்தச் சட்டம் 2020 உள்ளது. கொரோனா தொற்று மற்றும் அதனால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இது பொறுப்பற்ற முடிவு மட்டுமில்லாமல் திறம்பட கையாள வேண்டிய கொரோனா பேரிடரிலிருந்து கவனத்தை திசைதிருப்புவதுமாகும்.

மேலும், நமது அரசியல் சட்டப்படி ‘மின்சாரம்’ பொதுப்பட்டியலில் இருக்கிறது. மின் நுகர்வு மீதான வரி, மின் விற்பனை மீதான வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கான அதிகாரப் பட்டியலில்  உள்ளது. இந்நிலையில் புதிய மின்சார சட்டத் திருத்தம் 2020ன் மூலம், அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின் கீழ் 246வது பிரிவு வழங்கியுள்ள மாநிலங்கள் சட்டமியற்றும் அதிகாரத்தையும் - மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரத்தையும் மீறுவதாக உள்ளது. இதில் உள்ள கீழ்க்கண்ட அம்சங்கள்  மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும்,  அரசியல் சாசனம் வகுத்துள்ள கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானதாகவும் இருக்கிறது என்பதை தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

* மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களை மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது.
* அதற்கு தலைவர், உறுப்பினர்களைக் கூட மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் “தேர்வுக் குழுவே” தேர்வு செய்வது.
* 5 பேர் கொண்ட அந்த தேர்வுக் குழுவில் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களில் இருவர் மட்டுமே உறுப்பினர்களாக இருப்பது. அதுகூட ஒரு வருடப் பதவிக்காலம் கொடுக்கப்பட்டு மாநிலங்களின் பெயர் அகரவரிசைப்படி  உறுப்பினர்களாக நியமிக்கப்படுவது.
* மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினரோ, தலைவரோ இல்லாமல் இருந்தால் - மாநில ஆணையத்தின் பணியை வேறொரு மாநிலத்தின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கவனிக்க உத்தரவிடும் மத்திய அரசுக்கான அதிகாரம்.
* மின் கொள்முதல், மின் விற்பனை, மின்சாரத்தை அனுப்புதல் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்கள் தொடர்பான தாவாக்களை, இனிமேல் மத்திய அரசின்கீழ் அமைக்கப்படும் மின் ஒப்பந்த அமலாக்க ஆணையம் ஒன்றே தீர்வு காணும் என்பதும் - மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் விதத்தில் இப்படியொரு ஆணையத்தை உருவாக்குவது.
* மின் ஒப்பந்த அமலாக்க ஆணையத்தில் மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. மீண்டும் ஐந்தாண்டுகள் ஆட்சி செய்ய பா.ஜ.விற்கு மக்கள் அளித்த வாக்குகளை- மாநிலங்களின் அதிகாரங்களை பறிப்பதற்கோ, அரசியல் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தை ஒதுக்கித் தள்ளுவதற்கோ பயன்படுத்துவது- ஆரோக்கியமான மத்திய- மாநில உறவுகளுக்கு உகந்ததல்ல. மின்சாரத்தை தனியார்மயமாக்க மாநில அரசின் நிறுவனங்களை மத்திய அரசு மயமாக்குவது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

எனவே திமுக தலைவர் என்ற முறையில், மாநிலங்கள் சட்டமியற்றும் அதிகாரத்தை பறிக்கும் “புதிய மின்சார திருத்தச் சட்டம்” 2020ஐ திரும்ப பெற்றிட வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தையும் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
 இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டம்தான் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூணாக விளங்கி, உணவுப் பற்றாக்குறையை போக்கியதுடன் லட்சக்கணக்கான விவசாயிகளைப் பாதுகாத்தது.

Tags : MK Stalin , Farmers, Free Electricity, PM, MK Stalin, Letter
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...