திருவனந்தபுரம்: நெய்யாற்றின்கரை பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்த தமிழகத்தை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் பஸ் நிலையம் மூடப்பட்டுள்ளது.கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட நெய்யாற்றின்கரை பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணும், 25 வயது வாலிபரும் அமர்ந்து இருந்தனர். அவர்கள் நீண்ட நேரமாக அங்கேயே இருந்தனர். கையில் ஒரு பையும் வைத்திருந்தனர். இருவரும் மிகவும் சோர்வாக இருந்ததை அங்கிருந்தவர்கள் கவனித்தனர். எனவே அவர்களிடம் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டனர். அப்போது சேலத்தில் இருந்து வந்ததாக கூறினர். அவர்கள் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து விசாரித்தபோது, அவர்கள் சேலத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக களியக்காவிளை வந்து குறுக்கு சாலை வழியாக எல்லையை கடந்து பஸ்சில் நெய்யாற்றின்கரை வந்ததாகவும் கூறினர்.