சென்னை: சென்னை சாலிகிராமம் தசரதபுரம் 8வது தெருவை சேர்ந்தவர் விக்கி (எ) விக்னேஷ் (39). இவர், பிரபல கவர்ச்சி நடிகை மாயாவின் மகன். தற்போது, தனது பாட்டியும் நடிகையுமான கிருஷ்ணகுமாரியுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். விக்கி, கஞ்சா போதைக்கு அடிமையானவர். பல குற்ற வழக்குகள் உள்ளதால் விருகம்பாக்கம் சரித்திர பதிவேடு குற்றவாளியாக போலீசார் அறிவித்துள்ளனர். விக்கி தொடர்ந்து தனது நண்பர் கண்ணனை மிரட்டி வந்துள்ளார்.ஆத்திரமடைந்த கண்ணன் குடிபோதையில் 8 பேருடன் நேற்று முன்தினம் நள்ளிரவு விக்கி வீட்டிற்குள் புகுந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்தார்.
விக்கியை 10 இடங்களில் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். பிறகு அங்கிருந்து அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விக்கியை, பாட்டி கிருஷ்ணகுமாரி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு 6 இடங்களில் 40 தையல்கள் போடப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து விக்கி அளித்த புகாரின் அடிப்படையில், விருகம்பாக்கம் போலீசார் தலைமறைவாக உள்ள நண்பர் கண்ணன் உட்பட 8 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சாலிகிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.