×

சென்னையில் இருந்து கோவைக்கு இண்டிகோ விமானத்தில் வந்த வாலிபருக்கு கொரோனா: உடன் பயணம் செய்த 114 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

கோவை: நாடு முழுவதும் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து டெல்லி, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு விமானங்கள் இயக்கப்படுகிறது.  பயணிகள் அனைவருக்கும் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலமாக கடந்த திங்கட்கிழமை இரவு கோவை வந்த ரத்தினபுரியை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனா உறுதி செய்யப்பட்ட வாலிபர் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பணியாற்றி வந்துள்ளார். ஊரடங்கு காரணமாக ஓட்டல் மூடப்பட்டது. இதனால், வாலிபர் அங்கேயே விடுதியில் நீண்ட காலமாக தங்கியுள்ளார். விமான சேவை துவங்கியதால், அவர் கோவை வந்துள்ளார். இதனையடுத்து அந்த வாலிபர் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். வாலிபர் வந்த விமானத்தில் மொத்தம் 114 பேர் பயணம் செய்தனர். இவர்களில் 77 பேர் கோவையை சேர்ந்தவர்கள், 37 பேர் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அரசு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 


Tags : Chennai ,Indians ,Indigo ,Coimbatore , Chennai, Coimbatore, Indigo Airlines, Corona, Curfew
× RELATED சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு புதிய வசதி