ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை இல்லை கட்டாயப்படுத்தி கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

* பள்ளிகள் திறப்பு குறித்து இப்போது ஏதும் சொல்வதற்கு இல்லை

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில், மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் தமிழகத்தில் வகுப்பறை நோக்கின் என்ற செயலியை பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார். இந்த வெளியீட்டு நிகழ்ச்சியில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் லதா, அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் சுடலைக் கண்ணன், மற்றும் கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் வகுப்பறை நோக்கின் என்ற செயலி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு குறித்து இப்போது ஏதும் சொல்வதற்கு இல்லை. தனியார் பள்ளிகள் கட்டாயமாக கல்விக் கட்டணம் வசூலிக்க கூடாது. அப்படி செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.  தற்போது கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் வேளையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழு த உள்ள மாணவர்களின் உடல் நலம் தொடர்பான விவரங்களை வாங்கியுள்ளோம். தேர்வு எழுதும் மணவர்கள் அனைவருக்கும் முகக் கவசம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் யாராவது வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனைகளில் இருந்தால் அது குறித்து பரிசீலிக்கப்படும். இந்த ஆண்டு பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டம் குறைப்பது குறித்தும் இன்னும் முடிவு செய்யப்பவில்லை. அதற்காக அமைக்கப்பட்டுள்ள குழு பரிந்துரை கொடுத்த பிறகு பாடத்திட்டம் குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண குழு தலைவர் பதவி காலியாக உள்ளது. அதற்கான நபரை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களில் எத்தனை பேருக்கு வைரஸ் தொற்று இருக்கிறது என்ற விவரங்கள் ஏதும் வரவில்லை. மாணவர்களுக்கு அதுபோல இருக்க வாய்ப்பில்லை.  இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஆன் லைனில் பாடம் நடத்தக் கூடாது என அமைச்சர் கூறியிருந்தார். ஆனால் பின்னர், ஆன்லைனில் வகுப்பு நடத்துவதை யாரும் தடுக்க முடியாது. ஜூம் ஆப்பில் வைத்து நடத்துவது நல்லது என்றார். ஆன் லைன்  பாடம் நடத்துவது குறித்து அமைச்சர் மாற்றி மாற்றி கருத்துக்களை வெளியிட்டது  மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: