சென்னை: ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிசு யார் என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது நீதிமன்றம் என ஜெ.தீபா தெரிவித்துள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு எனவும் தெரிவித்துள்ளார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் வீடு உள்பட சுமார் ரூ.913 கோடி மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க.வை சேர்ந்த புகழேந்தி கடந்தாண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதாவின் சொத்துக்கள் மீது அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, அண்ணன் மகன் ஜெ.தீபக் ஆகியோருக்கு உரிமை உண்டு என்று நீதிபதிகள் கூறினர். மேலும் அவர்களை சொத்துக்களின் இரண்டாம் நிலை வாரிசுகள் என்றும் தெரிவித்தனர்.