கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தை சீர்படுத்த ரூ.50 லட்சம் கோடி வரை தேவை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

டெல்லி: நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த ரூ.50 லட்சம் கோடி வரை தேவைப்படுகிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கொரோனா வைரசால் பாதிப்படைந்த பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி அளவிற்கு பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவித்தது. இதனால் சுமார் 45 லட்சம் நிறுவனங்கள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: கொரோனாவால் நாடு பெரும் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகிறது. அதை சீரமைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு செய்து வருகிறது.

நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த ரூ.50 லட்சம் கோடி வரை தேவைப்படும் நிலை உள்ளது. ஏற்கனவே வேலையின்மை பிரச்சினை இருந்த நிலையில் 2 மாதங்களுக்கு மேலாக வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சந்தையில் பணப்புழக்கம் இல்லை. பொருளாதாரத்தின் சக்கரம் மீண்டும் செயல்படுவதற்கு மத்திய அரசில் இருந்து ரூ.20 லட்சம் கோடி, மாநில அரசுகளில் இருந்து ரூ.20 லட்சம் கோடி, பொது மற்றும் தனியார் முதலீடுகளில் இருந்து ரூ.10 லட்சம் கோடி தேவைப்படுகிறது. மார்ச் மாதத்தில் இருந்து சுமார் 6 லட்சம் சிறு, குறு நடுத்தர தொழில்கள் மூடிக்கிடந்தன. அவற்றை சீர்படுத்த வேண்டும்.

சுமார் 25 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில்களை சீரமைக்க நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

இந்த நிறுவனங்களுக்கு நிலுவை தொகையை 40 நாட்களுக்கு மேல் பிறகு செலுத்துவதற்கு வழிகளை செய்துள்ளோம். பெரும்பாலான தடைகளும் அகற்றப்பட்டுள்ளது. மிகப்பெரிய பொருளாதார சரிவை சந்தித்து வருகின்ற இந்த நேரத்தில் நாட்டில் உள்நாட்டு உற்பத்தியை 2 அல்லது 3 சதவீதம் வரை வளர்ச்சிக்கு கொண்டுவதற்கு கடுமையான முயற்சிகளை செய்து வருகிறோம். மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்மறையாக சென்று விடக்கூடாது. இதற்காகசந்தையில் அதிக பணப்புழக்கம் தேவைப்படுகிறது. வெளிநாட்டு முதலீடுகளும் அதிக அளவில் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: